,

மன்னார் மறைமாவட்ட ஆயரின் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துச் செய்தி

Spread the love

இயேசுவின் உயிர்ப்பு மனுக்குலத்துக்கு ஒரு நம்பிக்கையை வழங்கியுள்ளது. இயேசுவின் உயிர்ப்பு நமக்கு ஆறுதலின் செய்தியைத் தருகிறது. அதாவது நமது பாடுகளின் பின்னால் நமக்கும் உயிர்ப்பு வெற்றி உண்டு என்பதே அச்செய்தி என  மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஆயரின் உயிர்ப்பு பெருவிழா செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

ஈஸ்டர் பெருவிழா என்பது இயேசுவின் உயிர்ப்பை கொண்டாடும் விழாவாகும். இது கிறிஸ்தவர்களின் உயிர்நாடியான விழாவாகும். தவக்காலம் என்று சொல்லப்படுகின்ற நாற்பது  நாட்கள் ஒறுத்தல்,  தவ முயற்சிகளை மேற்கொண்டு கிறிஸ்தவர்கள் தங்களை ஆன்மீக ரீதியில் ஆயத்தம் செய்து புனித வாரத்திற்குள் நுழைகின்றனர்.

இந்தப் புனித வாரத்தில் வரும் முக்கிய நாட்களான பெரிய வியாழன், பெரிய வெள்ளி, புனித சனி, உயிர்ப்பு ஞாயிறு ஆகியவை கிறிஸ்தவர்களின் விசுவாச வாழ்வில் ஒரு மிக முக்கியமான, புனிதமான நாட்களாகும்.

இயேசுவின் பாடுகள் மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை மிகுந்த பக்தி வணக்கத்தோடு இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் நினைவு கூறுகின்றனர். இயேசுவின் பாடுகள் மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து ‘பாஸ்கா விழா’ என அழைக்கின்றனர். இயேசுவின் உயிர்ப்பு கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையாகும்.

இயேசுவின் உயிர்ப்பு குறித்து புனித பவுல் குறிப்பிடும் போது, ‘கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் பொருளற்றதாகி விடும்’  என்கிறார். எனவே கிறிஸ்தவ சமயத்தின் அடிப்படையாக, அத்திவாரமாக, ஆணிவேராக இருப்பது இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வாகும். இயேசுவின் உயிர்ப்பில் தான் கிறிஸ்தவம் கட்டப்பட்டுள்ளது.

மனிதனின் அறிவியல் வளர்ச்சி எவ்வளவு உயர்ந்து சென்றாலும் மரணத்திற்குப் பின்னர் மனிதனுக்கு என்ன நடக்கிறது என்பதைக் குறித்து மனித அறிவியல் தெளிவான விளக்கத்தை இதுவரை தரவில்லை. ஆனால் கிறிஸ்தவ நம்பிக்கை அதற்குத் தெளிவான பதிலை தருகிறது.

அப்பத்தில் இயேசுவின் உயிர்ப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். இயேசுவின் உயிர்ப்பு சாவின் மேல் வாழ்வு பெற்றுக்கொண்ட வெற்றியை எடுத்துக்காட்டுகின்றது. கிறிஸ்தவ பாரம்பரியத்தில் கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது சாவின் மேல் இயேசு ஏற்படுத்திய வெற்றியை வெளிப்படுத்துகின்றது. அத்துடன் இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் பெறக்கூடிய விண்ணக வாழ்வின் நம்பிக்கையை வழங்குகின்றது.

இயேசுவின் உயிர்ப்பு மனுக்குலத்துக்கு ஒரு நம்பிக்கையை வழங்கியுள்ளது. இயேசுவின் உயிர்ப்பு நமக்கு ஆறுதலின் செய்தியை தருகிறது. அதாவது நமது பாடுகளின் பின்னால் நமக்கும் உயிர்ப்பு, வெற்றி உண்டு என்பதே அச்செய்தி. இயேசுவின் பாடுகள் மரணத்தோடு அவருடைய வாழ்வு முற்றுப் பெறவில்லை. இயேசுவின் சீடர்கள் கூட ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தார்கள்.

நம்பிக்கை இழந்து நின்றார்கள். ஆனால் இயேசு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார், வெற்றிவாகை சூடினார். நம்முடைய வாழ்வும் பாடுகள் நிறைந்த வாழ்வுதான். துன்பங்கள், போராட்டங்கள் நிறைந்த வாழ்வுதான்.

ஆனாலும் நாம் நம்பிக்கை இழக்கக்கூடாது, வாழ்க்கையில் விரக்தி அடையக்கூடாது. காரணம் இயேசு தனது துன்பத்தை, சிலுவைப் பாடுகளைக் கடந்து உயிர்ப்பின் வெற்றியை  அடைந்தது போல, விண்ணேற்றமடைந்து மகிமை பெற்றதைப் போல, நாமும் வெற்றியை, மகிமையைப் பெறுவோம் என நம்புவதற்கு இயேசுவின் உயிர்ப்பு நமக்கு உறுதிப்பாட்டை தருகிறது.

உங்கள் அனைவருக்கும் எனது உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள்!அன்னை மரியாவின் வழியாக மருதமடு அன்னையின் பரிந்துரை ஊடாக உங்கள் அனைவரையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக! என மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page