கொடிகாமம் – வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிலுசன் என்ற 23 வயதுடைய இளைஞனின் மரணத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை அந்த இளைஞனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்கள்,
“கடந்த வியாழக்கிழமை(17) எமது மகன் குளித்துவிட்டு வந்தவேளை 3.00 மணிக்கு பின்னர் எமது மகனை அவரது நண்பர் அழைத்துச் சென்றார். அவருடன் சென்றுகொண்டிருந்தபோது இன்னொரு நண்பர் குளிக்க வருமாறு தொலைபேசியில் அழைத்ததனால் எமது மகன் அவரிடம் சென்றுள்ளார்,
அதன்போது கொடிகாமம் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவர்களுடன் இருந்துள்ளார். அந்த கேணியில் யாரும் குளிப்பதில்லை. அது கோவில் கேணி. தாமரை கொடியில் சிக்கி உயிரிழந்ததாக கூறியது பொய்.அந்த கேணியில் தாமரை கொடியே இல்லை.
மரண விசாரணை அதிகாரி, பொலிஸார்,சட்டத்தரணி உள்ளிட்ட பலர் நேற்றையதினம் அந்த பகுதிக்கு வந்தனர். இரண்டுபேரை அந்த குளத்தில் இறக்கி குளத்தை பரிசோதித்து பார்த்தனர். ஆனால் இருவரும் எந்தவிதமான பாதிப்புமின்றி வெளியே வந்தனர்.
உயிரிழந்த மகனின் ஆடையும், செருப்பும் குளத்தின் கரையில் இருந்தது. கேணியின் அருகே 3 மதுபான ரின்கள் இருந்தன. ஆனால் உடற்கூற்று பரிசோதனைகளில் இவர் மதுபானத்தை பாவித்ததாகக் கூறப்படவில்லை.
தண்ணீர் சுவாசப் பையின் உள்ளே சென்று அடைத்ததால் தான் மரணம் சம்பவித்ததாக அறிக்கையில் கூறப்படுகிறது. அவரைத் தோளில் பிடித்து அழுத்திய கண்டல் காயம் உள்ளது. அவரது சடலம் தாண்டு இருந்த இடத்தில் ஒரு நீளமான மீற்றர் கட்டை ஒன்று குற்றப்பட்டு இருந்தது. அப்படி அவர் தாழ்ந்திருந்தால் அத்த கட்டையில் பிடித்து ஏறியிருப்பார்.
மேலும் மந்திகை வைத்தியசாலையில் எங்களது பிள்ளையின் சடலம் இருப்பதாக கேள்வியுற்று நாங்கள் அங்கே சென்றவேளை, அவரை வைத்தியசாலையில் சேர்ப்பித்தவர்கள் இருவர் பொய்யான பெயர் கொடுத்துள்ளனர் என்ற விடயம் தெரியவந்தது.
ஏன் பொய்யான பெயர் கொடுக்க வேண்டும்? அன்றையதினம் அவர் யாருடன் பேசினாரோ அவ்வளவு விபரங்களும் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்டிருந்தது. எங்களுடைய தம்பி ஒருவர் தொலைபேசியை வாங்கும் போது அங்கிருந்த ஒருவர் அதனைப் பறித்தார், ஒரு மணித்தியாலமாக அந்த தொலைபேசி வழங்கப்படவில்லை.
சடலம் இருந்த இடத்தை நீதிவானுக்கு காட்டிய பொலிஸார் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டனர். பிறகு அவர்கள் வரவில்லை. எங்களிடம் விசாரணைகளுக்கு வந்த பொலிஸார், நீதிமன்றத்தில் நீங்கள் சட்டத்தரணி வைக்க வேண்டாம், நாங்கள் உங்களுக்காக வாதாடுகின்றோம் என்றனர்.
அவரது உடலை தொட்டவேளை உடலில் சூடு இருந்தது. ஆகையால் சடலத்தை பிரேத அறையில் போடவேண்டாம் என நாங்கள் கூறியவேளை, அவரது நண்பர்கள் சடலத்தை பிரேத அறையில் போடுமாறு விடாப்பிடியாக கூறினார்கள். அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற சந்தேகம் எழுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் உறவினர்கள் வைத்தியசாலையில் இல்லை. சிவரூபன் என்ற பெயரிலேயே கையொப்பமிட்டு அவரை வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். ஆனால் அந்த சிவரூபன் யார் என இதுவரை எமக்கு தெரியவில்லை. உடனிருந்த நண்பர்கள் யாரும் இதுவரை சடலத்தை பார்ப்பதற்கு வீட்டுக்கு வரவில்லை.
கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் தான் கொடிகாமம் பொலிஸ் இல்லை பருத்தித்துறை நிலைய பொலிஸ் என்று மந்திகை வைத்தியசாலையில் வைத்து பொய் கூறியுள்ளார். ஆனால் அவர் கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்.அவர் ஏன் அவ்வாறு பொய் கூற வேண்டும்? இந்த சதியில் ஈடுபட்ட 4 பேரை எமக்கு தெரியும்.
ஆனால் இதில் பலர் தொடர்புபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைச் சிலர் காணொளியும் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்த காணொளி யாரிடம் உள்ளது என்று தேடி பிடிப்பதோடு, நாங்கள் கூறுகின்ற நான்கு பேரிடமும் விசாரணைகளை மேற்கொண்டால் என்ன நடந்தது என கண்டுபிடிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளனர்.










Leave a Reply