மன்னாரில் கனிய மணல் காற்று வளங்கள் காணப்படுகிறது. ஆனாலும் பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் விரும்பாத செயற்பாடுகளை செய்ய மாட்டோம் என கூட்டுறவு பிரதி அமைச்சரும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (28.05) மன்னார் மாவட்டச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கான உத்தியோகபூர்வ அலுவலகத் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த கால அரசாங்கங்கள் ஊடாக இந்த கனிய மணல் அகழ்வில் ஈடுபடவுள்ள நிறுவனங்கள் சரியான முறையில் அனுமதி பெறாமல் அரசியல் ரீதியான சலுகைகளை வைத்து கொண்டே இந்தச் செயற்பாட்டுக்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளனர் .
அவர்கள் இந்த அனுமதியைச் சும்மா பெறவில்லை. முன்பு இங்கு இருந்த அரசியல்வாதிகள்,அரச அதிகாரிகள்,சமூக மட்ட அமைப்புக்களின் அனுமதியை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டே அதை நடைமுறைப்படுத்த இங்கு வந்திருக்கிறார்கள்.
ஆனால் எங்களுடைய அரசாங்கத்தை பொறுத்த வரையில் மக்களின் பாதுகாப்பு சூழல், மக்களின் விருப்பம் என்பவற்றுக்கே முன்னுரிமையளிப்போம் .
வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய பல வளங்கள் எமது நாட்டிலே காணப்படுகிறது. அதில் மன்னார் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் காற்று மற்றும் கனிய மணல் மிக சிறந்த வளம்.
ஆனாலும் விஞ்ஞான ரீதியில் இவ்வகையான செயற்பாட்டினால் இப்பகுதிக்கு அல்லது சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து அதன் பிறகு அதற்கான நடவடிக்கைகள் எடுக்க கூடியதாக இருக்கும்.
பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக நாங்கள் இந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர் ,அரச ஊழியர்கள் இந்த பிரதேசத்தை சேர்ந்த மக்கள் இந்த சூழல் போன்ற விஷயங்களை கருத்தில் கொள்வோம்.
அதில் பாதிப்பு மக்களிடம் எதிர்ப்பு இருக்கும் என்றால் அவ்வகையான நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட மாட்டோம் எனவும் தெரிவித்தார்.














Leave a Reply