ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடைபெற்றுள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறு நேற்றைய தினம் (20.05) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பணிப்பாளர்கள் குழு மற்றும் அனைத்து, இணைந்த
தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன், ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் உரிமையை அரசாங்கத்தின் கீழ் வைத்திருக்கும் கொள்கை முடிவுக்கிணங்க, பணிப்பாளர்கள் குழுவால் தயாரிக்கப்பட்ட வர்த்தகத் திட்டத்தின் இலக்குகளை அடைவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதன் பிரகாரம், , பணப்பாய்வு முகாமைத்துவம் மற்றும் நிறுவனத்தின் செயற்திறனை அதிகரிப்பதன் மூலம் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நட்டமடையாதவாறு கட்டியெழுப்ப, அதன் அனைத்து தரப்பினரின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
கூட்டுப் பங்களிப்பு இல்லாமல் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை கட்டியெழுப்ப முடியாது என்று இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,
விமான சேவை நிறுவனத்தின் செயற்பாட்டுச் செலவுகளுக்காக தொடர்ந்தும் திறைசேரியிடமிருந்து நிதியைப் பெற முடியாத சூழலில், நிறுவனத்திற்குள்ளேயே நிறுவனத்தைக் கட்டியெழுப்புவதற்கான திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அரசியல் அதிகாரத் தரப்பு என்றவகையில், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்குத் தேவையான அனைத்து அர்ப்பணிப்புகளையும் செய்வதாகவும், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தைக் கட்டியெழுப்புவது அதன் அனைத்து ஊழியர்களின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி.
இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் 20 பி. ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது இலங்கை மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப் பணம் என்பதால், அந்தப் பணத்தை செயற்திறன் மிக்க வகையில் பயன்படுத்துவது அனைத்து ஊழியர்களின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.










Leave a Reply