வலி சுமந்த வரலாற்றினை அடுத்த சந்ததிக்கும் கடத்திச் செல்லும் உன்னதமான பணியில் ஒன்றிணையுங்கள் என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி,
இன்றைய தினம் (11.05) காலை,மன்னார் பேருந்து நிலையத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடாத்தப்பட்டது.
யாழில் இருந்து வருகை தந்திருந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மன்னார் பேருந்து நிலையத்தில் வைத்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியை தயாரித்து அங்கிருந்த மக்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
இதன் போது அவர்கள், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“இன்றைய தினம் மன்னார் மண்ணில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகமாக ஒன்று கூடி இந்நிகழ்வை முன்னெடுத்து இருக்கின்றோம் மே 18 என்பது தமிழ் மக்களின் மனதில் இன்று வரை ஆறாத வடுவாகவே உள்ளது.எம்மவர் வலி சுமந்த வரலாற்றினை அடுத்த சந்ததியினருக்கும் கடத்திச் செல்வது பல்கலைக்கழக மாணவர்களாகிய எங்களுடைய கடமை.
அந்த வகையில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு இவ்வாரம் முழுவதையும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக பிரகடனப்படுத்தி அனுஷ்டித்து வருகிறோம்.அந்த வகையில் இன்று நான்காவது நாளாக மன்னாரிலும் வவுனியாவிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்குகின்றோம்.
இந்நிலையில்,மே 18ஐ அன்மித்த காலப்பகுதியில், கேளிக்கைகளைத் தவிர்த்து எம் இனத்தின் வலி சுமந்த வரலாற்றினை அடுத்த சந்ததியினருக்கும் கடத்திச் செல்லும் உன்னதமான பணிக்கு ஒன்றிணையுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனத் தெரிவித்தனர்.


















Leave a Reply