,

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் சாக்கு போக்குகளைக் கூறி அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது-சஜித் பிரேமதாச

Spread the love

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் சாக்குப்போக்குகளை கூறி மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

திஸ்ஸமஹாராம பி்ரதேசத்தில் நேற்று (21.04) திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி யார் என்பது தொடர்பிலான தகவல்களை விசேட அறிவிப்பின் மூலம் வெளிக்கொணர்வதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்புடைய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மாத்திரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் களத்தில் முதலாளித்துவம், சோசலிசம், கம்யூனிசம், சமூக ஜனநாயகம் என பல்வேறு கோட்பாடுகள் காணப்படுகின்றன. இவற்றில் சமீபத்தில் இணைந்ததோர் கோட்பாடு தான் பொய்யும் பாசாங்குத்தனமும். ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் பொய்யான கோரிக்கைகளை முன்வைத்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான திசைகாட்டி அரசாங்கம், தற்போது புதிய கூற்றுக்களை முன்வைத்து, முட்டாள்தனமாக பிரஸ்தாபிக்கும் அரசாங்கமாக மாறியுள்ளது.

33% ஆல் மின் கட்டணத்தை குறைப்போம் என வாக்குறுதி வழங்கியிருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் இன்னும் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என்றனர். இதனால் பொதுமக்கள் கொந்தளித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை நாடிய போது பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு 20% ஆல் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்தது. இந்த மின்சார கட்டண குறைப்பை அரசாங்கமோ ஜனாதிபதியோ எடுக்கவில்லை. எஞ்சியுள்ள 13% குறைப்பை இந்த அரசாங்கம் விரைந்து எடுக்க வேண்டும்.

இந்த பொய், கொள்ளை, ஏமாற்றுதல் போன்றவற்றால் தொடர்ந்தும் நாம் ஏமாறுவதா இல்லையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். ஆளுந்தரப்பினர் பழைய பொய்களோடு புதிய பொய்களையும் முன்வைத்து வருகின்றனர். வரவுசெலவுத் திட்டத்தில் கூட இல்லாத சலுகைகளை வழங்குவதாக பொய் சொல்கிறார்கள்.
திசைகாட்டி அதிகாரங்களை கைப்பற்றாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட மாட்டாது என ஜனாதிபதி தேர்தல் சட்டங்களை மீறி பகிரங்கமாக கூறிவருகின்றார். உள்ளூராட்சி சட்டங்கள் குறித்து போதிய விளக்கம் ஜனாதிபதிக்கு இல்லை. அதனாலயே இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்.

கடனை செலுத்தினால் மட்டுமே வங்குரோத்து நிலையிலிருந்து எம்மால் தப்பிக்க முடியும். கடனை அடைக்க முடியாவிட்டால், மீண்டும் நாம் 
வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுவோம். 2028 ஆம் ஆண்டு முதல், நமது நாடு தனது நிலுவையில் உள்ள வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இதற்கு அன்னியச் செலாவணி தேவை.பொருளாதார வளர்ச்சியும், அரச வருவாயில் அதிகரிப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு 2025 முதல் 2028 வரை 5% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பேணி கடைபிடிக்க வேண்டியுள்ளது.

அவ்வாறு இல்லையென்றால் கடனை செலுத்த முடியாமல் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும்.
எனவே, பொருளாதாரத்தை மேம்படுத்தி விரிவுபடுத்த வேண்டும்.
தொழிற்சாலைகளை அதிகரிக்க வேண்டும், சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும், ஏற்றுமதி தலங்களை பன்முகப்படுத்த வேண்டும். இவற்றைப் புரிந்து கொள்ளாமல் அரசாங்கம் கட்டுப்பாடுகளை பிறப்பிக்கக் கூடாது. அரசாங்கத்திடம் இது குறித்து எந்த திட்டமும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page