அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் டொனால் ட்ரம்பின் நடவடிக்கையைக் கண்டித்து சான்பிரான்சிஸ்கோ மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதுடன். வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ள
சுமார் 1.20 கோடி பேரில்,
மெக்ஸிகோவை சேர்ந்த 40 லட்சம் பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 7.25 லட்சம் பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்ற பின் சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ள நிலையில்,
அமெரிக்கா முழுவதும் நாள்தோறும் 3,000 பேர் கைது செய்யப்பட்டு அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மெக்ஸிகோவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ட்ரம்பின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, கலிபோர்னியா மாகாணத்தின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் கடந்த 3 நாட்களாக தீவிர போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டங்களில் மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்று, ட்ரம்புக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர். போராட்டத்தின்போது, லொஸ் ஏஞ்சலஸ் முழுவதும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.
இதன் போது போராட்டக்காரர்கள் மீது லொஸ் ஏஞ்சலஸ் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய 100 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அமெரிக்க அரசு சார்பில் தேசிய படையை சேர்ந்த 2,000 வீரர்கள் லொஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கடற்படையை சேர்ந்த 500 வீரர்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.










Leave a Reply