மன்னார் -நானாட்டான் பிரதேச சபையில் சுயாதீன இளைஞர் குழுவாக நண்டு சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழுவினர் தமது ஆதரவை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளதாக சுயாதீன இளைஞர் குழுவின் தலைவர் ஜி.எம்.சீலன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்றைய தினம் (6.06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், பல கட்சிகள் எங்களிடம் ஆதரவு கோரி இருந்த போதிலும் தேசியத்தின் பால் நிற்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எங்களது ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளோம். செல்வம் அடைக்கலநாதன் அண்ணன் அவர்கள் எங்களுடன் கௌரவமான முறையில் ஒரு பேச்சுவார்த்தையை நடத்தினார். அதாவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த மன்னார் மாவட்டத்தில் எந்த ஒரு சபையையும் கைப்பற்ற கூடாது என்பதற்காக அவர் எங்களுடன் கலந்துரையாடி இருந்தார். தமிழரசுக் கட்சியினரும் மாவட்ட மட்டத்தில் இருக்கக்கூடியவர்கள் எங்களுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அவர்களுடைய நிலைப்பாடு எங்களுக்கு திருப்திகரமானதாக அமையவில்லை. அதை இந்த இடத்தில் வெளிப்படையாக நாங்கள் சொல்ல வேண்டும்.நானாட்டானைப் பொறுத்தவரையில் ஆட்சி அமைக்கக்கூடிய சக்தியாக எங்களுடைய இளைஞர் அணி இருக்கின்றது.எங்களது ஒட்டு மொத்த முடிவில் முதன்மையானது இந்த மன்னார் மாவட்டத்தில் இருக்கக்கூடிய கனிய வளங்களை களவாடுகின்ற சூறையாடுகின்ற அரசாங்கத்தினுடைய நிலைப்பாட்டை நாங்கள் எதிர்க்கின்றோம்.காற்றாலை திட்டங்களையும் எதிர்க்கிறோம். தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு உப தவிசாளர் பதவி தருவதாக கோரிய போதும் அதை நாங்கள் நிராகரித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எங்கள் ஆதரவை வழங்கியுள்ளோம்.என்றார். 









