மன்னார் மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் இரானுவத்தினருக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்குடன் தள்ளாடி 54 வது காலாட்படை பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட வன்னி பிராந்திய கட்டளையிடும் தளபதி கரப்பந்தாட்ட வெற்றி கிண்ண இறுதிப் போட்டி நேற்றைய தினம்(04.06).புதன்கிழமை மாலை மன்னார் நகரசபை உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் சார்ந்த அணியினருக்கும் இராணுவ அணியினருக்குமிடையே இடம் பெற்ற குறித்த சுற்றுப்போட்டியில் மன்னார் பிரதேச செயலக அணியினர் மற்றும் தள்ளாடி இராணுவ B அணியினரும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்த நிலையில் அவர்களுக்கான போட்டி நேற்றைய தினம்(04) இடம் பெற்றது குறித்த போட்டியில் மன்னார் பிரதேச செயலக அணியை இராணுவ அணியினர் வென்று 50,000 ரூபா பணப்பரிசு பதக்கங்கள் மற்றும் வன்னி கட்டளையிடும் தளபதி வெற்றி கிண்ணத்தையும் தமதாக்கி கொண்டனர். இரண்டாம் இடம் பெற்ற மன்னார் பிரதேச செயலக அணிக்கு 25000 ரூபா பணப்பரிசும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு பிரதம விருந்தினராக வன்னி பிராந்திய தலைமை கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் பிரதீப் குலதுங்க, சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கெளரவ விருந்தினர்களாக பிரதேச செயலாளர்கள்,இராணுவ தளபதிகள்,உதவி திட்டமிடற்பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். மன்னார் மாவட்டத்தில் இராணுவம், பொது மக்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாகவும் விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் முகமாகவும் இராணுவத்தினரால் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 























