இந்தியாவில் அகதிகளாகத் தங்கியுள்ள இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதில் உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகப்
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யுத்தக்காலத்தில் வடக்கில் வாழ்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் பாதுகாப்பின் நிமித்தம் இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றனர்.
அவர்கள் தற்போது இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.
அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்கள் தடையாக இருப்பதால், அந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்காக விரைவில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து அனுமதி பெறப்படவுள்ளது எனப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு வந்த மூவர், தலைமன்னார்ப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 24 வயது இளம் தம்பதியினர் மற்றும் மூன்றரை வயது குழந்தை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில், இராமேஸ்வரத்தில் இருந்து கடல் மார்க்கமாக மீண்டும் நாட்டிற்கு வந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










Leave a Reply